வர்த்தகம், பாதுகாப்பு குறித்து அதிபர் ட்ரம்ப்புடன் விவாதித்தேன்.. தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு : பிரதமர் மோடி

டெல்லி : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் டெல்லி ஹைதரபாத் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் இருவரையும் அங்கு பிரதமர் மோடி வரவேற்றார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்கள் மட்டும் தனியாகவும், அதன் பிறகு இரு நாட்டு உயர்நிலைக் குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என நேற்றே நமஸ்தே டிரம்ப் உரையில் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, அணுசக்தி, பாதுகாப்பு, அறிவுசார் சொத்துடமை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. .

இந்நிலையில் டெல்லி ஐதராபாத் மாளிகையில் இரு தரப்பு பேச்சுக்கு பின் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தனது அழைப்பை ஏற்று டெல்லி வந்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், இந்தியர்கள் அளித்த வரவேற்பு பெருமை அளிக்கிறது என்றார். இந்தியாவை நாங்கள் பெரிதும் நேசிக்கிறோம் என்று கூறிய டிரம்ப், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தன்னை வரவேற்றது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் இந்திய மக்கள் பிரதமர் மோடியை அதிகம் நேசிப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

பிரதமர் மோடி கூட்டறிக்கையில் பேசியதாவது,

*குடும்பத்துடன் டிரம்ப் இந்தியா வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு டிரம்பிற்கு வழங்கப்பட்டது.  

*இருநாடுகளின் மக்களின் முன்னேற்றத்திற்காகவே இந்த உறவு வலுப்படுத்தப்படுகிறது. மக்களை முன்னிலைப்படுத்தியே இந்தியா - அமெரிக்கா உறவு மேம்படும்.

*இந்தியா - அமெரிக்கா உறவை மேம்படுத்த பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினோம். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

*இருநாடுகளின் உறவை வலுப்படுத்த ராணுவ ஒத்துழைப்பு அவசியமான ஒன்று. இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறித்தும் ஆலோசித்தோம். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

*சுகாதாரம், மருத்துவ ஒத்துழைப்பு, அணுமின் உற்பத்தி திட்டங்கள்,தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினோம்

*தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிராக இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

*போதைப் பொருள் விற்பனை, கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்தோம்.

*இரு நாடுகள் இடையே தெளிவான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆலோசனை செய்தோம்.

* அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை மீண்டும் வரவேற்கிறேன். கடந்த 8 மாதங்களில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுவது இது 5வது முறையாகும்.

இவ்வாறு அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி கூட்டறிக்கை வெளியிட்டார்.

Related Stories: