சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரை துறையில் 20 அடி, 40 அடி கிரேன்களை பயன்படுத்தினர். இவை திரைப்படத்துறையால் உருவாக்கப்பட்ட உபகரணங்கள். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று திரைப்பட தொழிலாளர்களுக்கு தெரியும். இப்போது 60 அடி, 100 அடி, 200 அடி உயரத்தில் இருந்து படமாக்க விரும்புகின்றனர்.
ஆனால், அதற்கு சரியான உபகரணங்கள் திரைத்துறையில் இல்லை. எனவே, தொழில்துறையில் இருந்து கிரேன்கள் வரவழைத்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்த கிரேன்களை எப்படி இயக்க வேண்டும் என்ற தொழில்நுட்ப அறிவு இங்குள்ள சினிமா கலைஞர்களுக்கு இல்லை. அதனால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. திரைத்துறை சாராத உபகரணங்களை உபயோகிக்கும்போது, அதை பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கும், திரைத்துறை தொழிலாளர்களுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு, உரிய அனுமதி பெற்ற பிறகே படப்பிடிப்புக்கு செல்வது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம். இது சமீபத்தில் நடந்த விபத்தில் இருந்து அனைவரும் கற்றுக்கொண்ட பாடம்.