ஆம்பூர்: ஆம்பூர் அருகே பிறந்த 2 மாதமான நிலையில் பெண் குழந்தை இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூர் அடுத்த பார்சனாபள்ளியை சேர்ந்தவர் காந்தி, இவரது மகன் முரளி(33). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஜெய(29). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான ஜெயளளளக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், குழந்தை தர்ஷிணியை, ஜெய நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் தரையில் படுக்கவைத்து விட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களின் மற்றொரு மகள் அருகில் இருந்த கட்டிலில் இருந்து தவறி குழந்தை மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், அலறி துடித்த பச்சிளம் குழந்தை தொடர்ந்து அழுததால் அவரது குடும்பத்தினர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து குழந்தையின் தந்தை முரளி அளித்த புகாரின் பேரில் உம்ராபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்த குழந்தையின் சடலத்தை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.