சென்னை: குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கான பணி நியமன கலந்தாய்வானது சென்னை பாரிமுனையில் இருக்கக்கூடிய டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி மாநிலம் முழுவதும் இருக்ககூடிய 9 ஆயிரத்து 782 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உடனேயே அதன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் ஒரே தேர்வு மையத்தை தேர்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அதிரடியான ஒரு உத்தரவை பிறப்பித்தது.