சொகுசு கப்பலில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை அளிக்க ஜப்பான் அரசு முடிவு!

டோக்கியோ: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. டைமன்ட் பிரின்சஸ் என்ற பிரம்மாண்ட சொகுசு கப்பல் கடந்த 3ம் தேதி முதல் ஜப்பானின் யோகஹாமா துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் ஓரு முதியவருக்கு பரவிய கொரோனா வைரஸ் தற்போது 454 பேரை தாக்கியுள்ளது. மொத்தமுள்ள 3,700 பேரில் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவிய வண்ணம் உள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் மருந்துகளை செலுத்தி சிகிச்சையளிக்க அந்நாட்டு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விவரித்த ஜப்பான் அரசின் மூத்த செய்தி தொடர்பாளர் யோஷிகிடே சுகா, எச்ஐவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சோதனைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். ஜப்பான் சொகுசு கப்பலில் 138 இந்திய பயணிகள் உள்ளனர். இவர்களில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனிடையே 300 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு விமானம் மூலம் தனது நாட்டுக்கு கொண்டு சென்றுவிட்டது. வைரஸ் பரவுவதை தடுக்க வெள்ளிக்கிழமைக்குள் தொற்று இல்லாத பயணிகளை வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. கப்பலில் உள்ளவர்கள் மற்றும் தரையில் உள்ளவர்கள் என மொத்தம் 540 பேரை அங்கு கோவிட்-19 வைரஸ் தாக்கியுள்ளது. ஏற்கனவே தாய்லாந்து மருத்துவர்கள் எச்ஐவிக்கான மருந்துகளை கலந்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்ததில் வெற்றி கண்டதாக தெரிவித்த நிலையில், ஜப்பானும் அந்த முயற்சியில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: