அலகாபாத்: உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 22 பேர் கொல்லப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து டிசம்பர் 20 மற்றிம் 21ம் தேதிகளில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். போலீசாரின் அராஜக நடவடிக்கையால் தான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக மாநில அரசு தாக்கல் செய்துள்ள உறுதி மொழி அறிக்கையில் வன்முறையின்போது 22 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.