திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் இன்றி 200-க்கு பெரிய லட்டு: சோதனை முறையில் விற்பனை துவக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் இன்றி 200.க்கு ஒரு பெரிய லட்டு விற்பனை  செய்வது, சோதனை முறையில் தொடங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் கல்யாண உற்சவ சேவை நடைபெறுகிறது. இந்த சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இரண்டு பெரிய லட்டுகள், இரண்டு வடை, ஐந்து சிறிய லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஒரு சிறிய லட்டு மட்டும் இலவசமாக வழங்கி மற்ற பிரசாதங்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.  மேலும், கல்யாண உற்சவத்தில் மட்டும் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்க கூடிய பெரிய லட்டுகள் சிபாரிசு கடிதத்தின் மூலம் 200 கட்டணத்தில் கோயிலுக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இனி பக்தர்கள் எந்தவித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல், நேரடியாக  கோயிலுக்கு வெளியே உள்ள  லட்டு கவுன்டரில் 200 கட்டணம் செலுத்தி பெரிய லட்டுகளை பெறுவதற்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக சோதனை முறையில் நேற்று பத்தாயிரம் பெரிய லட்டுகளை இருப்பு வைத்து பக்தர்களுக்கு 200 கட்டணத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே, சலுகை விலையில்  4 லட்டுகள் 70க்கு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் எத்தனை சிறிய லட்டுகள் வேண்டுமென்றாலும் ஒரு லட்டு 50 கட்டணத்தில் கோயிலுக்கு வெளியே உள்ள லட்டு கவுன்டரில் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோன்று 100க்கு விற்பனை செய்யப்படக்கூடிய வடையும் 200 ஆக உயர்த்தி பக்தர்கள் தேவைக்கு ஏற்ப உள்ள லட்டு கவுன்டரில் விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Related Stories: