புத்தாகரம் மகாதேவி நகரில் காஸ் சிலிண்டர் வெடித்து தொழிலதிபர் பரிதாப பலி: மகனிடம் விசாரணை

சென்னை: புழல் அருகே, காஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலதிபர் உடல் கருகி பலியானார். புழல் அருகே புத்தாகரம், மகாதேவி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முத்துசுப்பிரமணி (60), தொழிலதிபர். இவர், அண்ணாநகரில் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். இவரது ஒரே மகன் மித்ரா (20). லண்டனில் படித்து வருகிறார். முத்துசுப்பிரமணி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் மித்ரா சென்னை வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மித்ரா வெளியே சென்றுவிட்டு, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.  வீட்டை திறந்து பார்த்தபோது உள்ளே புகை மண்டலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து புழல் போலீசார் மற்றும் மாதவரம் தீயணைப்பு படையினருக்கு தெரிவித்துள்ளார். மாதவரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டுக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொண்டு சென்று பார்த்தனர். அப்போது சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறி கிடந்தது. மேலும் முத்துசுப்பிரமணி உடல் கருகி சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிகரெட்டை பற்ற வைக்க காஸ் சிலிண்டரை திறந்து வைத்து, மின்சார சுவிட்ச்சை போட்டதால் காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்ததா என அவரது மகனிடம் விசாரிக்கின்றனர்.

Related Stories: