காஞ்சி, செங்கை மாவட்ட பிடிஓ அலுவலக உதவியாளர் பணிக்கு ஆளுங்கட்சியினருக்கு லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வேலை: நேர்முக தேர்வில் பங்கேற்றவர்கள் குற்றச்சாட்டு

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பிடிஓ அலுவலக உதவியாளர் பணிக்கான  நேர்முக தேர்வில், ஆளுங்கட்சியினருக்கு லஞ்சம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்குவதாக நேர்முக தேர்வில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 13 ஒன்றியங்களில் உள்ள 26 அலுவலக உதவியாளர் பணிக்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவர்களுக்கு நேற்றும், இன்றும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு தொடங்கியது. உதவியாளர்கள் பணிக்கு ஆளுங்கட்சி சார்பில் ஏற்கனவே 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கே இந்த உதவியாளர் பணியிடம் அதிகாரிகள் மூலம் நிரப்பப்பட உள்ளதாகவும், நேர்முகத்தேர்வு வெறும் கண்துடைப்பு என்றும் அதில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் கூறுகையில், ‘வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தலா இரண்டு காலியிடத்திற்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நேர்முகத் தேர்வு நேர்மையாக நடைபெற வேண்டும். யாருடைய தலையீடும் இல்லாமல் படிப்பு, தகுதி, அடிப்படையில் தகுதியானவர்களுக்கு உதவியாளர் பணி வழங்கப்பட வேண்டும். இதனை மாவட்ட கலெக்டர்கள் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். மணிக்கணக்கில் காத்திருந்து நேர்மையாக இன்டர்வியூவை  சந்தித்துள்ளோம். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகளும் நடந்து கொள்ளக்கூடாது ’ என்றனர்.

Related Stories: