இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை பிரபல ஓட்டல் மேலாளர் கைது

சென்னை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல ஓட்டல் மேலாளரை போலீசார் கைது செய்தனர். வடபழனி, ஆற்காடு சாலையில் தனியாருக்கு சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அமைந்துள்ளது. இதில் திரையங்குகள், ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், உணவகங்கள், ஐடி நிறுவனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும், கல்லூரி பெண்களும் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில், நேற்று 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வந்துள்ளார். அவர் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது தெரியாமல் தான் நடந்திருக்கும் என்று எதுவும் கூறாமல் சென்றுள்ளார். ஆனால் அந்த நபர் அந்த பெண்ணை விடாமல் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த நபரிடம் கேட்ட போது வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், நடந்த சம்பவம் பற்றி காவல் உதவி மையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வடபழனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வரும் லட்சுமணன் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories: