சென்னை 1: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ஏசு மகன் அஜீத்குமார்(22). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 7ம் தேதி பிறந்த நாள். ஒரு தாதா ரேஞ்சுக்கு உயர்த்த நினைத்த அவரது நண்பர்கள், அஜீத்குமாரின் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடத் தீர்மானித்தனர். இதன்படி 7ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, புன்னப்பாக்கம் காலனியில், அவரது நண்பர்களான மணி மகன் கலைவாணன் (25), புஷ்பராஜ் மகன் நரேன் (20), நாகலிங்கம் மகன் பாலாஜி (20), பாபு மகன் விஜய் (20) ஆகியோர் புடைசூழ தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் கேக்கினை, பெரிய பட்டா கத்தியைப் பயன்படுத்தி வெட்டி நண்பர்களுடன் அதனை வீடியோ எடுத்துள்ளார். அத்துடன் அந்த வழியாக சென்ற பொது மக்களையும் பட்டாக் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.