நெல்லை: மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு, விதவைக்கான நிதி வழங்குவதற்கு அதிகாரிகள் ஆவணங்களை கேட்டதாக கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு பெண் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அருகே வெள்ளாளன்குளம் அபிசேகப்பட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூமா (37). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பூமா மாற்றுத்திறனாளி. இவரது இடது காலில் ஊனம் இருப்பதால் அதற்காக மாற்றுத்திறனாளி அலுவலரின் சான்றிதழ் ஏற்கனவே பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2018ல் மாற்றுத்திறனாளிக்குரிய உதவித்தொகை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு செய்திருந்தார். ஆனால் அவர் கேட்ட உதவித்தொகைக்கு பதிலாக, அதனை மாற்றி அவரது கணவர் இறந்து விட்டதாகவும், அவருக்கு ஆதரவற்ற விதவைக்குரிய உதவித்தொகை வழங்க அதற்குரிய ஆவணங்களை கொண்டு வரும்படியும் கோட்டாட்சியர் அலுவலகத்தால் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.