லால்குடி: லால்குடி பகுதியில் குலை நோய் புகையான் தாக்கியதால் சுமார் 800 ஏக்கர் நெற்பயிர்கள் பதரானது. இதனால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கண்ணீரில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடி, புள்ளம்பாடி, பகுதியில் சம்பா சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் புள்ளம்பாடி பகுதியில் புஞ்சைசங்கேந்தி, நஞ்சைசங்கேந்தி, வெள்ளனூர், லால்குடி பகுதியில் பெருவளநல்லூர், பல்லபுரம், ஆகிய பகுதிகளில் பெருவளவாய்க்கால் மூலம் பாசனம் பெற்று 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பா சாகுபடி நெற்கதிர்கள் முற்றி சில இடங்களில் அறுவடை செய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் சுமார் 800 ஏக்கருக்கு மேல் அறுவடைக்காக காத்திருக்கும் நெல் கதிர்கள் சாய்ந்து காணப்பட்டுள்ளது. இதில் கோ 50, தன்வி, கோ 51, ஆகிய நெல் ரகங்களில் பழ நோய், குலை நோய் தாக்கியதால் நெல் மணிகள் பதராக காணப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா பொன்னி நடவு செய்த பகுதிகளில் குலை நோய் முற்றிலும் தாக்கப்பட்டு நெல் மணிகள் 70 சதவீதம் பதராக மாறியுள்ளது.