டெல்லி: நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்து முழுமையான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், 2020 ஜனவரி மாதம் வரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 859 ஆகும். இதேபோன்று உயர்நீதிமன்றங்களில் 45 லட்சத்து 81 ஆயிரத்து 619 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் அதிகபட்சமாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 7 லட்சத்து 32 ஆயிரத்து 239 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.