சென்னை: பாமகவின் வடக்கு மண்டல செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:பாமக கட்சியை தொடங்கி 32 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட நமது கட்சி ஆட்சிக்கு வரவில்லை. 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், 70 முதல் 80 சட்ட மன்ற தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் பாமக ஆட்சியை பிடிக்கும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த வெற்றிக்காக நாம் திட்டமிட வேண்டும். பாமக ஆட்சி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிர்வாகிகள் கட்சியில் ஒதுங்கி கொள்ளுங்கள். திறமை உள்ள பாமக நிர்வாகிகள் கடினமாக உழைத்தால், தமிழகத்தில் வேறு கட்சிகளுக்கு வேலை இருக்காத நிலை ஏற்படும். தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள பாமக முதலாவது இடத்திற்கு தாவ வேண்டும். அதற்கு கட்சியினரின் கடின உழைப்பு தேவை.இந்த முறை நாம் கண்டிப்பாக ஆட்சிக்கு வந்தாக வேண்டும். தொகுதிக்கு தலா ஒரு லட்சம் வாக்காளர்களை நாம் பெற வேண்டும்.