ஈரோடு: ஈரோட்டில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இஸ்லாமிய பெண்ணுக்கு புதியதாக வழங்கப்பட்ட வங்கி பாஸ்புக்கில், ‘இடம் பெயர்ந்தவர்’ என்று அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஈரோடு பெரியார் நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஈரோடு பெரியார் நகரில் வசித்து வரும் டாக்டர் சலீம் என்பவரது மனைவி ஜஹானாரா பேகம் என்பவர் சேமிப்பு கணக்கை கடந்த பல ஆண்டுகளாக வைத்துள்ளார். இந்நிலையில், பழைய பாஸ்புக் முடிவடைந்துவிட்டதால் புதிதாக பாஸ்புக் வாங்க நேற்று முன்தினம் வங்கிக்கு சென்றார். அப்போது புதிய பாஸ்புக் வழங்கிய வங்கி நிர்வாகம் பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் வாடிக்கையாளரின் பெயர், வங்கி சேமிப்பு கணக்கு எண், முகவரி உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அச்சிட்டு கொடுத்துள்ளது.