தென்தாமரைக்குளம்: குமரி அருகே சாமித்தோப்பில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் மீண்டும் ஆய்வை தொடங்கியுள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள சாமித்தோப்பில் உள்ள உப்பள பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசால் ₹13.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 800 ஏக்கர் நிலப்பகுதியில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வறிக்கையும் மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்த இடம் உகந்ததாக இல்லை என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தார். இந்தநிலையில் வசந்தகுமார் எம்.பி., விஜயகுமார் எம்.பி. ஆகியோர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகளை தொடங்கினர். இதனை தொடர்ந்து அரசு அங்கீகாரம் பெற்ற சென்னையில் அமைந்துள்ள ஜியாஸ் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனிக்கு அளவீடு செய்யும் பணிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த கம்பெனி, அளவீடு செய்யும் பணிகளை நேற்று தொடங்கியது.