ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் வகையில் திருத்தம் செய்ய திமுக தரப்புக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் வகையில் திருத்தும் செய்ய திமுக தரப்பு வேட்பாளர் மருது கணேஷ் தரப்புக்கு அனுமதி அளித்திருக்கும் உயர்நீதிமன்றம் அதே வேளையில் அவரது கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் வகையில் திருத்தும் செய்ய திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் செலவு தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற மருது கணேசனின் கோரிக்கையை நிராகரித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அபிராமபுரம் காவல் நிலையம் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்திருந்தார்.

மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க கோரியும் வழக்கறிஞர் வைரக்கண்ணன் மற்றும் திமுகவை சேர்ந்த மருது கணேஷ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து இன்று இடைக்கால உத்தரவுளை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கை பொறுத்தவரையில் சிபிஐ விசாரணை கோரும் வகையில் வழக்கினுடைய கோரிக்கைகளை திருத்தி மனுதாக்கல் செய்ய அனுமதி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத்தொகையை இழப்பீடாக வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட புதிய மனுவினை வருகின்ற பிப்ரவரி 11ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: