அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை: அமைச்சரவையின் ஒப்புதலுடன் விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வந்தது.  இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. பல ஆண்டுகளாக நிலவி வந்த அயோத்திப் பிரச்னைக்கு உச்ச  நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த உத்தரவில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம். முஸ்லிம்கள் வழிபடுவதற்கு மாற்று இடமாக அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். 1992-ல் பாபர் மசூதி  இடிக்கப்பட்டதற்குக் கடும் கண்டனத்தை நீதிமன்றம் பதிவுசெய்தது. பாபர் மசூதி இருந்த பகுதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது செல்லாது எனவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் உத்தரப்பிரதேச அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்கிடையே, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு  செய்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோவிலை கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளது. ராமர் கோவிலை கட்டுவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories: