பரனூர் சுங்கச்சாவடியில் 3-ம் நாளாக வாகனங்கள் கட்டணமின்றி பயணம்: 18 லட்சம் காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் புகார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் 3-ம் நாளாக வாகனங்கள் சுங்க கட்டணமின்றி செல்கின்றது. மேலும் மொத்தம் உள்ள 12 பூத்களில் இருந்தும், அலுவலகத்தில் இருந்தும் ரூ.18 லட்சம்

காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் புகார் அளித்துள்ளார். சுங்கச்சாவடியில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் எந்த வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. சென்னை செங்கல்பட்டு சுங்கச்சாவடி கடந்த 26-ம் தேதி நடைபெற்ற மோதல் காரணமாக கட்டண வசூல் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது 3 வது நாளாக அதே நிலை தொடர்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகன நெரிசல் குறைவாக உள்ளது. கடந்த 26 ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து நேற்று  இரவு புறப்பட்டுச் சென்றது.

இந்த பேருந்து செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை வந்தடைந்த போது, சுங்கச்சாவடி ஊழியர் அரசு பேருந்து ஓட்டுநரிடம் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இது கைகலப்பாக மாறியது. இந்த பிரச்சனையால் பரனூர் சுங்கச்சாவடியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் வெகு நேரம் காத்திருந்த பயணிகள் சுங்கச்சாவடி ஊழியர்களின் செயலால் ஆத்திரமடைந்து,  சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் தாக்கப்பட்ட சுங்கச்சாவடியில் இருந்து ரூ.18 லட்சம் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ம் தேதி 3 கட்ட வசூல்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் சுமார் 18 லட்சம் வரை வசூல் வந்தது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அன்று சனிக்கிழமை என்பதால் வங்கியில் பணத்தை செலுத்த முடியாமல் இருந்துள்ளது. பரனூர் சுங்கச்சாவடி பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு பேருந்து ஊழியர்கள்-சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: