சிந்தாதிரி பேட்டையில் பரபரப்பு: சிஏஏ சட்டத்தை எதிர்த்தவர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தவர்களை கைது செய்தததை கண்டித்து சிந்தாதிரிபேட்டை காவல் நிலையம் முன்பாக வியாபாரிகள் ஆர்பாட்டம் நடத்தியதால் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை அத்திப்பட்டான் தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் தினேஷ்(30).  இவர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான வாசகங்களுடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பேனாக்களை தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுத்து வந்துள்ளார். இதற்கு அதே பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் சிலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட வியாபாரிகள் மீது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தினேஷ், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார், சிலரை கைது செய்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் முன்பு வியாபாரிகள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கூடியிருந்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் சிந்தாதிரிப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: