சமூக வலைதளங்களில் ஆபாசம், அவதூறாக கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை தாக்கல் செய்க : சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை :சமூக வலைதளங்களில் ஆபாசம், அவதூறாக கருத்துக்களை பதிவு செய்பவர்களின்  பட்டியலை தயார் செய்யும் படி, சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் சேகரித்த அறிக்கையை ஜனவரி 29ல் தாக்கல் செய்ய  சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாச கருத்து

சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளைப் போட்டு கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டு பதிவு செய்தவர்களின் பட்டியலை குறைந்தபட்சம் 10 பேரின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உத்தரவு

இந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சைபர் கிரைம் போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் அறிக்கை திருப்தியாக இல்லை என தெரிவித்த நீதிபதி தண்டபாணி, தமிழகம் முழுவதும் ஆபாசக்கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவோரின் பட்டியலை தயாரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார். மன்னிப்பு கடிதம் அளிக்கும் பட்சத்தில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் நீதிபதி கூறினார்.

Related Stories: