மதுரை: தேனி மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனிசெட்டப்பட்டியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஒபிஎஸ் ராஜா உள்பட 17 உறுப்பினர்களின் நியமனத்தையும் ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு தலைவராக துணைமுதல்வர் ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓபிஎஸ் ராஜா நியமிக்கப்பட்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில் கூறியதாவது; ஓ ராஜா உள்பட 16 பேர் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதால் அவர்களது நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா செயல்பட இடைக்காலதடை விதித்தது.
மேலும் இவரது தலைமையிலான இடைக்கால நிர்வாகக்குழு செயல்படவும் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், அதற்கு எதிராக ஆவின் நிர்வாகம் தரப்பில், இடைக்காலத் தடையை நீக்க கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓ.ராஜா உள்பட 17 பேர் நியமனமும் முறைகேடாக நடந்துள்ளது என்று கூறி அவர்களின் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இது ஓபிஎஸ் உள்பட அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.