விருதுநகர்: இ.குமாரலிங்கபுரத்தில் 401 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் படைப்புழு தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் குறைவான இழப்பீடு வழங்கி உள்ளதால் முழு காப்பீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இ.குமாரலிங்கபுரத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள், கோவிந்தராஜ் என்பவரது தலைமையில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு அளித்தனர். இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: இ.குமாரலிங்கபுரத்தில் கடந்த 2018-19ல் 401.84 ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. இதற்கு காப்பீடாக ஏக்கருக்கு ரூ.329 இன்சூரன்ஸ் பிரிமியமாக செலுத்தினோம். இதனிடையே, படைப்புழு தாக்குதல் காரணமாக மக்காச்சோள பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்தது. 30 கிலோ மக்காச்சோளம் கிடைக்க வேண்டிய பரப்பளவிற்கு 2 கிலோ 745 கிராம் மட்டும் கிடைத்துள்ளதாக புள்ளியல் துறை அறிக்கை தெரிவிக்கிறது.