மும்பை: இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவது பெரும் கஷ்டமாக உள்ளது; அதற்கு பல்வேறு தடைகளை தாண்ட வேண்டியுள்ளது. மேலாண்மை, தொழில்நுட்பம் போட்டியை சமாளிக்கக் கூடிய திறன் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என்.சந்திரசேகரன் கூறினார். மும்பையில் நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவில் தொழில்கள் முன்னேற்றம் அடைய பல வகையில் ஒத்துழைப்பு மிகவும் தேவை. அரசு தரப்பில் இருந்து முழு அளவில் ஆதரவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தொழில் கடுமையாக பாதிக்கப்படும். இப்போதுள்ள இளைஞர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்களை வேகமாக செல்லுங்கள் என்று சொல்லி வந்தால் மட்டும் வளம் காண முடியாது; அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்புகளும் முக்கியம். எந்த ஒரு துறையிலும் மந்தமாக இருக்க கூடாது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக, எந்த ஆதரவும் தராமல், வேகமாக சென்றால் தான் முன்னேற்றம் காண முடியும் என்று மக்களை தள்ளிவிடுவதன் மூலம் வளர்ச்சியைக் காண முடியாது. தொலைநோக்கு சிந்தனை, நவீனத்தை புகுத்துதல், சிறந்த மேலாண்மை தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் மாற்றம் செய்தால்தான் முன்னேற்றம் காண முடியும்.