பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு நாளை நடக்க உள்ளதால், காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை அரிய வகை நவபாஷாணத்தால் ஆனது. இக்கோயிலில் கடந்த 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. 13 வருடங்கள் ஆவதால், தொடர் பூஜை காரணமாக மூலவர் சிலையில் சாத்தப்பட்ட மருந்து கரைந்து விட்டதாக தெரிகிறது. தற்போது கும்பாபிஷேக பணி பாலாலயத்துடன் துவங்கி உள்ளது. இந்நிலையில் தற்காலிக அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.