குடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..: மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னை: குடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு 20,22,23-ம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதற்கான ஒத்திகைகளுக்காக சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவு சின்னம் வரை காலை 6 முதல் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்; குடியரசு தின விழா 26.01.2020-ம் தேதி நடைபெறவிருப்பதால் அதற்கான ஒத்திகை 20,22,23 மற்றும் குடியரசு தினவிழா நாளான 26.01.2020 ஆகிய 4 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதிலும் அடையாறில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை வழியாக செல்லலாம். மேலும் காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அதனையடுத்து ஆர்.கே சாலையில் காந்திசிலை நோக்கி செல்லும் பேருந்துகள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படும். சிவகாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் பேருந்துகள் அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்லலாம் என்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது. மேலும் ஆர்.கே சாலையில் காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும். வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணாசாலை சந்திப்பிலிருந்து போர் நினைவு சின்னம் நோக்கி வாகனங்கள் வர தடை விதிக்கப்படுகிறது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: