ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே குடிநீர் கிணற்றில் தவளைகள் செத்து மிதந்ததால் விஷம் கலக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ளது சுந்தரராஜபுரம். இங்குள்ள மக்களுக்கு ஆண்டான் துரை கொண்டான் கண்மாய் அருகே உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரித்து சப்ளை செய்யப்படுகிறது. இந்த கிணற்றில் நேற்று திடீரென தவளைகள் செத்து மிதந்தன. கிணற்றில் விஷம் கலந்திருக்கலாம் என தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேத்தூர் ஊரக காவல் நிலைய எஸ்ஐ செல்வம் மற்றும் ஊராட்சி செயலர் மணிகண்டன், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.