புதுச்சேரி: தஞ்சை மருத்துவக்கல்லூரியில் 1965ல் இளநிலை மருத்துவம் (எம்பிபிஎஸ்) 135 மாணவ, மாணவிகள் படித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிலும், பல்வேறு உலகநாடுகளிலும் மருத்துவதுறையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சந்தித்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் எம்ஏஎஸ் சுப்ரமணியன் நினைத்தார். அதன்படி கடந்த 2000ம் ஆண்டில் தன்னுடன் தொடர்பில் இருக்கும் மருத்துவ கல்லூரி நண்பர்களிடம் அந்த எண்ணத்தையும் தெரிவித்தார். இதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால் புதுச்சேரியில் முதல் முறையாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் அந்த ஆண்டே நடைபெற்றது. அப்போது இதுபோன்ற சந்திப்பை தொடர்ந்து நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு, இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இதற்காக அல்பர்ட் ரோஸ் 1965 தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி பேட்ச் என்றும் பெயர் சூட்டப்பட்டது.