சத்தியமங்கலம்: பண்ணாரி சோதனைச்சாவடியில் ஒற்றை யானை அட்டகாசம் செய்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் அவ்வப்போது சுற்றித்திரிகின்றன. குறிப்பாக ஒற்றை யானை கடந்த சில நாட்களாக சாலையில் சுற்றித்திரிந்தபடி அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று காலை பண்ணாரி காவல்துறை சோதனைச்சாவடி முன்பு வந்த ஒற்றை யானை சாலையின் நடுவே நின்று வாகனங்களை வழிமறித்தது.