சென்னை: பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை செவ்வாய் அல்லது புதன் வரும்போது தமிழக அரசு திங்கட்கிழமையை அரசு விடுமுறையாக அறிவித்து, தொடர்ச்சியாக 5 அல்லது 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடும். இந்த விடுமுறையை இன்னொரு சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவித்துவிடும். அதேபோன்று, வருகிற 15ம் தேதி பொங்கல் பண்டிகையாகும். 16ம் தேதி மாட்டுப்பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறையாகும். இந்த நிலையில் 13ம் தேதி (திங்கள்), 14ம் தேதி (செவ்வாய்) அரசு விடுமுறையாக அறிவித்தால், தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று தமிழக அரசும் 13, 14ம் தேதி விடுமுறையாக அறிவிக்கும் என கடந்த 2 நாட்களாக செய்திகள் பரவின. ஆனால் நேற்று மாலை வரை விடுமுறை விடுவது குறித்து எந்த அறிவிப்பும் அரசு சார்பில் வெளியிடவில்லை.