லக்னோ: உத்தரபிரதேசத்தில் 4 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், நவாப்கன்ஜ் பகுதியை சேர்ந்த 4 வயது தாழ்த்தப்பட்ட சிறுமி கடந்த 2016ம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி மாயமானார். பின்னர், அவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தன. மருத்துவ சோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக உமா காந்த் (32), முராரி லால் (24) என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பரேய்லி நீதிமன்றம், கடந்த புதன்கிழமை இருவரையும் குற்றவாளி என தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை நேற்று வெளியிடப்பட்டது. அதில், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.