சென்னை: பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 3 பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெங்களூருவில் 3 அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த நபர்களை தமிழ்நாடு க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இம்ரான்கான், முகமது சயித், முகமது ஹனீப்கான் என்ற மூவரும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு, போலியாக சிம்கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை தயாரித்து கொடுத்ததாகவும், பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் அவர்களின் கொலை வழக்கில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாத ஒருங்கிணைப்பாளரின் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வாகன சோதனையின் போது சுட்டு கொல்லப்பட்டார். இந்த விவகாரத்திலும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.