சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 14 பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 26 உதவிப் பேராசிரியர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதப்பட வேண்டும். ஆனால், இப்போது துறைகளுக்கு பதிலாக ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஒரே அலகாக கருதப்பட்டு, 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த துறை அலகை மாற்றிவிட்டு பல்கலைக்கழக அலகை அறிமுகப்படுத்தும்போது, 200 சதவீத ரோஸ்டர் சுழற்சி முழுமையாக முடிவடைந்திருக்காத பட்சத்தில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.இவை ஒருபுறமிருக்க ‘துறை அலகு’ முறையிலிருந்து ‘பல்கலைக்கழக அலகு’ முறைக்கு மாறுவதற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்தவர் யார் என்பது உடனடியாக விடை காணப்பட வேண்டிய வினா.