நெல்லை: தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் பனை ஓலை மற்றும் வண்ண பொங்கல் பானை விற்பனை களைகட்டியது. தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நெல்லையில் வர்ணம் தீட்டப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பாளை நீதிமன்றம் அருகே மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் முருகன் என்பவர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு அரிசி உள்ளிட்ட பொங்கல்படி கொடுப்பவர்கள் வர்ணம் தீட்டப்பட்ட மண் பானைகளில் அவற்றை வைத்து கொடுப்பார்கள். இதற்காக ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. வண்ணப்பானை பெரிய அளவில் உள்ளது ரூ.500 ஆகும். சிறிய பானைகள் ரூ.250, ரூ.300 என்ற விலையில் உள்ளன. வர்ணம் தீட்டப்படாத மண்பானைகள் ரூ.80 விலையில் இருந்து விற்கப்படுகிறது என்றார்.