மதுரை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை தாக்கல் செய்ய தாமதிப்பது முறைகேட்டுக்கே வழிவகுக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை ஏற்கனவே, தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட் கிளை, தனது எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் நடந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஜனவரி 3ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவாளரிடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யும் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளதாகவும், மேலும் 15 நாள் அவகாசம் வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. ஏன் காலதாமதம் எனக்கேட்ட நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘முந்தைய உத்தரவுப்படி, ஏன் இன்னும் சிசிடிவி காட்சிப் பதிவுகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை’’ என்றனர்.