ஊட்டி: சாதிச் சான்று வழங்க கோரி அய்யன்கொல்லி கிராமத்தை சேர்ந்த பனியர் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
பந்தலூர் அருகேயுள்ள அய்யன்கொல்லி கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவன் சுமேஷ் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் பனியர் பழங்குடியினத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர் உள்ளோம்.
இதில், பெரியவர்கள் இருவர். மீதமுள்ள 5 பேரும் சிறு வயதுடையவர்கள். எங்கள் குடும்பத்தில் உள்ள 7 பேருக்கும் இது வரை சாதிச்சான்று வழங்கப்படாமல் உள்ளது. நான் தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு பல்வேறு தேவைகளுக்கும் சாதிச்சான்று தேவைப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக எனக்கு சாதிச்சான்று வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் சுமேஷ் கூறியுள்ளார்.