மேலூர்: பொங்கலை வரவேற்கும் விதமாக மேலூர் பகுதியில் இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட கரும்பின் விலை சற்று அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் சூரக்குண்டு, எட்டிமங்கலம், கீழையூர், கீழவளவு, சருகுவலையபட்டி, வெள்ளலூர், உறங்கான்பட்டி பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. இவை தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாததால் கரும்பு உற்பத்தி குறைவாக இருந்தது. இந்தாண்டு போதிய மழையும், கால்வாய் நீரும் இருந்ததால் கரும்பு உற்பத்தி நன்றாக உள்ளது.