சென்னை: வைகோ வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சித் தேர்தலை முழுமையாக நடத்தாமல், இதுவரையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உள்ளாட்சிகளை பிரித்து ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆளும் கட்சியினரின் அடாவடிகள், அதிகார அத்துமீறல்கள், அரசு இயந்திரத்தின் பாரபட்சமான அணுமுறை இவற்றின் மூலம் ஊரக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக அரசு களத்துக்கு வந்தது.
மலையளவு குவிக்கப்பட்ட வெள்ளிக் காசுகள் அள்ளி வீசப்பட்டன, ஆனால் இவை அனைத்தையும் எதிர்கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. எளிய மக்களுக்கும் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தை வழங்கும் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்திட அதிமுக அரசு முன்வராவிட்டாலும் மக்கள் சக்தி திமுக கூட்டணியின் பக்கம் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது.