வேலூர் : மூன்றாவது திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் 6 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாயை, அவரது 3வது கணவருடன் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமம் முருகர் கோயில் மலையடிவாரத்தில் 6 மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு சிறிய பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டு அதன் மீது பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது. கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது. குழந்தையை யாரோ கடத்தி நரபலி கொடுத்து விட்டதாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் சென்று பார்த்தபோது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. வேலூர் அரசு மருத்துவமனை டாக்டரை வரவழைத்து, குழந்தையின் உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். யாரேனும் குழந்தையை கடத்தி புதையலுக்காக நரபலி கொடுத்தார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா வரகூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி(23) மற்றும் அவரது மனைவி மஞ்சுளா(23) ஆகியோர் இந்த கொடூர கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் நேற்று காலை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
ஆற்காடு அடுத்த தாழனூர்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அவரை தாய்மாமனான பஞ்சாட்சரம் ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அதன்பின் வேலைக்கு சென்ற மஞ்சுளாவிடம், ‘உனது கணவருக்கும் உனக்கும் வயது அதிகம் வித்தியாசம் உள்ளது. அவரை திருமணம் செய்து கொண்டாயே’ என தோழிகள் கேலி செய்துள்ளனர். இதையடுத்து கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணமான 2 மாதத்தில் அவரை பிரிந்து தனது ஊரில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையில் தனது அக்காளின் நண்பரான தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை 2வது திருமணம் செய்து தேனியில் வசித்து வந்தார். அங்கு அவர்களுக்கு கடந்த மே மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில் பாண்டியராஜனுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து குழந்தையுடன் தாழனூர்சத்திரத்துக்கு மஞ்சுளா வந்து தங்கியுள்ளார்.
அதன்பின் தான் வேலை செய்த ஷூ கம்பெனியில் ஏற்கனவே காதலித்து வந்த வரகூைர சேர்ந்த ராஜாமணி என்பவருடன் மஞ்சுளா மீண்டும் காதலை புதுப்பித்து, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால் குழந்தை இடையூறாக உள்ளது என ராஜாமணி தெரிவித்துள்ளார். கடந்த 23ம் தேதி குழந்தையை கம்மவான்பேட்டைக்கு கொண்டு வந்து கழுத்தை நெரித்து கொலை செய்து மலையடிவாரத்தில் சிறிய பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். அதன்மீது பாறாங்கற்களையும் வைத்துள்ளனர். அன்றைய தினமே கோயிலில் ராஜாமணியுடன் 3வது திருமணம் செய்து கொண்ட மஞ்சுளா வரகூர் கிராமத்தில் தங்கினார். இதற்கிடையில் கொலையான குழந்தை யாருடையது என போலீசார் வரகூர் கிராமத்தில் விசாரித்தபோது, பொதுமக்கள் மஞ்சுளாவின் குழந்தை ஓரிரு நாட்களாக காணவில்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராஜாமணி மற்றும் மஞ்சுளாவிடம் விசாரித்தபோது 3வது திருமணத்துக்காக கொலை செய்தது தெரிய வந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.