இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 13 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டு மீனவர்களை அச்சுறுத்தும் செயலில் கோத்தபய ராஜபக்சே அரசு இறங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் - ஜெகதாபட்டினம் துறைமுகத்திலிருந்து டிசம்பர் 27ம் தேதி மூன்று விசைப்படகுகளில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டியதாக இவர்கள் அனைவரையும் இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. மேலும் மீன் பிடித் தொழிலுக்குப் பயன்படுத்திய மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளது. இந்நிகழ்வு தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்துள்ளனர்.

பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன் பிடிக் கருவிகளையும் சிங்கள கடற்படை சேதப்படுத்தி இருக்கிறது. கோத்தபய ராஜபக்சே அரசு தொடர்ந்து தமிழர்கள் மேல் வெறுப்பை காட்டும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 13 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கும், மீன் பிடிப் படகுகளை மீட்பதற்கும் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: