உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என முத்தரசன் கூறினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் ஊராட்சியில் குடும்பத்தினருடன் வாக்களித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மூன்றாண்டு காலமாக தேர்தலை நடத்தாமல் பொருத்தமில்லாத காரணங்களை கூறி தமிழக அரசு தொடர்ந்து தள்ளி வைத்தது. உச்சநீதிமன்ற நிர்பந்தம் காரணமாக தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு 27மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 27 மாவட்டங்களிலும் அதையே இரண்டாக பிரித்து இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. திருத்துறைப்பூண்டி அருகே வேளுர் ஊராட்சியில் எனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தேன். வாக்காளர்கள் ஆர்வத்தோடு காலையிலேயே வாக்களிக்க வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.  உள்ளாட்சி தேர்தலில் 27 மாவட்டங்களிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: