போலி ஆவணம் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீதான வழக்கில் சாட்சிகள் வாக்குமூலம் பதிவு

மதுரை: நடிகர் தனுஷ் போலி ஆவணம் தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் -  மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் தனுஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  மேலூர் நீதிமன்றத்திலுள்ள வழக்கை ரத்து செய்தது. இந்த வழக்கில் நடிகர் தனுஷ் தனது கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்  கூறி கதிரேசன் மதுரை ஜேஎம் 6ம் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இந்த மனு மாஜிஸ்திரேட் முத்துராமன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 22 பேர் கொண்ட சாட்சிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. இதில், 6 சாட்சியங்களின் வாக்குமூலம் நேற்று பதிவு  செய்யப்பட்டன. மீதமுள்ள சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக விசாரணையை ஜன. 21க்கு தள்ளிவைத்த மாஜிஸ்திரேட், அன்றைய தினம் சாட்சியம் தொடர்பான ஆவண, ஆதாரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: