மும்பை: கூலி இழப்பை தவிர்ப்பதற்காக பெண் கரும்பு கூலித் தொழிலாளிகள் தங்கள் கருப்பையை அகற்றும் கொடுமை மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது. இந்த பிரச்னையில் உடனே தலையிடக்கோரி மாநில அமைச்சர் நிதின் ராவுத் முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மத்திய மகாராஷ்டிராவில் உள்ள மராத்வாடா பிராந்தியத்தில் கரும்புத் தொழிலாளிகள் பெருமளவில் உள்ளனர். அவர்களில் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் இருக்கின்றனர். மாதவிடாய் காலங்களில் இந்த பெண்கள் வேலைக்கு செல்வதில்லை. எனவே அவர்களுக்கு கூலி இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக அவர்கள் தங்கள் கருப்பையை அகற்றி விடுவதாகவும் இதுபோன்று சுமார் 30,000 பெண்கள் தங்கள் கருப்பையை அகற்றி இருப்பதாகவும் நிதின் ராவுத் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.