சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயணா, தமது பயண அனுபவத்தின் அடிப்படையில் சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து உயர் நீதிமன்றமே பொதுநல வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதியரசருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, சென்னை - வாலாஜாபேட்டை சாலையின் தரத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆணையிட்டிருக்கிறது. 2004ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சாலை அதன்பிறகு கடந்த 15 ஆண்டுகளில் ஒருமுறை கூட, மீண்டும் முழுமையாக அமைக்கப்படவில்லை, என்பது அந்த சாலையில் சுங்கவரி செலுத்தி செல்லும் மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்பது மட்டுமின்றி, அலட்சியத்தின் உச்சகட்டமும் ஆகும்.