அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைகாய் விளைச்சல் குறைவு காரணமாக தொடர்ந்து ஒரு மாதமாக முருங்கைக்காய் கிலோ ரூ.300க்கு விற்பனையாகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கைக் காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, மற்றும் பெங்களூரு, புனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய்க்கு தனி மவுசு உள்ளது. ஆகையால் மலைக்கோவிலூர், ஈசாத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.