சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பார்சலில் வந்த 10 கையெறி குண்டுகள், 7 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு, ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சங்கமித்ரா விரைவு ரயிலில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நாக்பூரில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை யாரும் பெற்றுக்கொள்ளாததால் ரயில்வே அதிகாரிகள் பேசின்பாலம் சால்ட் குடியிருப்பில் உள்ள குடோனுக்கு 10ம் தேதி எடுத்துச்சென்றனர். பார்சலை நேற்று பிரித்து பார்த்தபோது அதில் 10 கையெறி குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், நாக்பூரில் உள்ள இந்திய ராணுவ ஏ72 ஐ.என்.எப். பட்டாலியன் கமாண்டன்ட் பிரவீன் காக்டே அந்த பார்சலை அனுப்பியது தெரியவந்தது.