சாத்தான்குளம் அருகே வெள்ளத்தில் கார் சிக்கியது இருவர் மீட்பு

சாத்தான்குளம்:   தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தேரியூரை சேர்ந்தவர் முத்துலிங்கம்(75). பல் டாக்டரான இவர், திசையன்விளையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது நண்பர் தனபாண்டியன்(52). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திசையன்விளையில் இருந்து உடன்குடிக்கு காரில் சென்றனர். தனபாண்டியன், காரை ஓட்டினார். சாத்தான்குளம் அருகே வைரவன் என்ற இடத்தின் வழியாக மாற்றுப்பாதையில் சென்றனர். இப்பகுதியில் மழை பெய்ததால் வைரவன்குளத்தில் இருந்து வெள்ளம் வெளியேறி, தாம்போதியை மூழ்கடித்தப்படி சென்று கொண்டிருந்தது.

இதையறியாத டாக்டர் முத்துலிங்கம், அவரது நண்பர் ஆகியோர் தாம்போதி பாலத்தை காரில் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் கார் சிக்கியது. பாலத்தின் மையப் பகுதியில் சிக்கிக்கொண்டதால் காரை மீட்க முடியவில்லை. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் பதறிய இருவரும் காரின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து குரல் கொடுத்தனர். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் இருவரையும் உயிருடன் மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய காரும் மீட்கப்பட்டது.

Related Stories: