லண்டன்: இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சிக்கு பாரம்பரியமாக வாக்களித்து வந்த வடகிழக்கு இங்கிலாந்து பகுதி மக்கள், பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பழமைவாத கட்சிக்கு இம்முறை வாக்களித்துள்ளனர். இவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதாக போரிஸ் ஜான்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காததால், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு இடைத் தேர்தலை சந்தித்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். அவரது பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ் கட்சி) மொத்தம் உள்ள 650 இடங்களில் 364 இடங்களில் வென்று அபார வெற்றி பெற்றது.