சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்...!

சென்னை: சிலை கடத்தல் வழக்குகள் தொடர்புடைய ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம், சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் ஒப்படைத்துள்ளார். தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது ஓராண்டு பதவிக்காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைதொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர்,

பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு இல்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறிவிட்டார். இதுதொடர்பான வழக்கு கடந்த 4ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று கூறி சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது, ஆனாலும், பொன்.மாணிக்கவேல் உச்சநீதிமன்ற உத்தரப்படி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்காமல் இருந்து வந்தார்.

ஏனெனில், தன்னால் விசாரிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிடி வடிவில் உள்ளதாகவும், அவை தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்று அவர் விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில், பொன்.மாணிக்கவேல் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், அவர் தம்மிடமிருந்த 17,790 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைத்துள்ளார்.

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை ஒப்படைப்பதற்கு, தமிழக அரசு உரிய கால அவகாசத்தை தமக்கு வழங்கவில்லை என பொன்.மாணிக்கவேல் புகார் கூறியுள்ளார். மேலும், நியாயமற்ற முறையிலும், தம்மை அலைக்கழிக்கும் நோக்கத்திலுமே, தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: